வெள்ளை மாளிகைக்குள் கோகைன் போதை பொருள்

அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு மற்றும் அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில், வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அங்கு வெள்ளை பவுடர் போன்று ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை.

அதேவேளை, வெள்ளை மாளிகைக்கு உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்து முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது.

பின்னர் மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அது கோகைன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை இடம்பெறுகின்றது.

Exit mobile version