ரமழானில் தீவிர தாக்குதல் – இஸ்ரேல் கெபினெட் அமைச்சர்

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர், தெற்கு இஸ்ரேல் பகுதியில் அதிரடியாக நுழைந்து பல இஸ்ரேலியர்களை கொன்று,பிணைக்கைதிகளாக பிடித்தும் சென்றனர்.

அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய ராணுவ படை (Israeli Defence Forces), ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில்  சிறார்கள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை கொன்றுள்ளனர்.

130 நாட்களை கடந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனத்தில்
28,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது.

பிணைக்கைதிகளை விட வேண்டுமானால் நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இருந்தபோதிலும், போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல், பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு கெடு விதித்திருக்கிறது.

இஸ்ரேலி கேபினெட் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) இது குறித்து தெரிவிக்கும் போது :

”மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரமழான் மாதம் தொடங்கும். ரமழான் தொடங்கும் முன் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால்,பாலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம். அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேசவுள்ளோம்.இது தீவிரமான நடவடிக்கைதான்.

ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன – அவர்கள் பிணைக்கைதிகளை விடுவித்து விட்டு சரணடையலாம். இதன் மூலம் காசா மக்களும் ரமழானை சிறப்பிக்க முடியும். இல்லையென்றால், தீவிர தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version